காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ரூபேஷ், சென்னையில் டாட்டூ ஓவியராகப் பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டதால், அவர் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பிறகும் ரூபேஷுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறுகள் ஏற்பட்டு வந்தாலும், அவர் பெற்றோருடன் சமாதானமாகப் போகவே முயற்சி செய்து வந்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ரூபேஷின் குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவிற்கு அவரது பெற்றோர் வர மறுத்ததால் குடும்பத்தில் விரிசல் அதிகமானது. இதனால் மனவருத்தத்தில் இருந்த ரூபேஷ், நேற்று இரவு மதுபோதையில் தனது தந்தை ஏழுமலையைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது குழந்தையின் பிறந்தநாளுக்கு வராதது குறித்து இருவருக்கும் இடையே வீட்டின் வாசலில் கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தந்தை ஏழுமலை தான் கையில் வைத்திருந்த கத்திரிக்கோலால் மகன் ரூபேஷை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரூபேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலைக்குக் காரணமான கத்திரிக்கோலையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமண விவகாரத்தில் தந்தை மகனைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
