நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (31) என்பவர், அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் தலையணைப் பகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 9 மாதமே ஆன ஆண் குழந்தையின் தந்தையான ஆறுமுகம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பாபநாசம் தலையணைக்குக் குளிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அவரிடமிருந்த செல்போன் எதிர்பாராதவிதமாகத் தண்ணீரில் தவறி விழுந்துள்ளது. அதை எடுப்பதற்காக ஆற்று நீரில் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரமசிங்கபுரம் காவல் துறையினர், உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கையில் 9 மாதக் குழந்தையை வைத்துக்கொண்டு தவிக்கும் மனைவியும், குடும்பத்தினரும் ஆறுமுகத்தின் உடலைப் பார்த்துக் கதறி அழுத காட்சி அப்பகுதி மக்களிடையே பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
