ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் மாவட்டத்தில் உள்ள மால்புரா பகுதியில் கனமழை காரணமாகச் சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தது. அப்பகுதியில் உள்ள ஒரு மின்சாரக் கம்பத்தில் இருந்து மின்சாரம் கசிந்து, அதைச் சுற்றித் தேங்கியிருந்த மழைநீரில் பாய்ந்துள்ளது. அந்த வழியே நடந்து சென்ற வாலிபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்த நீரில் காலடி வைத்ததால், அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த திடுக்கிடும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி நெஞ்சை நடுங்க வைத்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த இளைஞருக்கு உடனடியாக முதலுதவி அளித்து உயிர்ப்பிக்க முயன்றும் பலனின்றிப் போனது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், மின்சாரக் கசிவு ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
