மகாராஷ்டிராவின் பிரபல தொழிலதிபர் ஒருவரின் 26 வயது மகனான கேதன் விஷால் என்பவருக்கும், சியா கோயல் (20) என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இருவரும் புனே அருகே உள்ள லோகட் கோட்டைக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது, கேதன் விஷால் மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. செல்பி எடுக்கும்போது அவர் பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டதாக சியா கோயல் நாடகமாடியதை அடுத்து, காவல்துறையினர் இதனை விபத்து மரணம் என்று முதலில் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும், வருங்கால கணவர் இறந்த நிலையிலும் சியாவின் நடத்தையில் எவ்வித சோகமும் இல்லாமல் இயல்பாக இருந்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணையில் இறங்கினர்.

காவல்துறையினரின் அதிரடி விசாரணையில், சியா கோயல் தனது காதலனுடன் சேர்ந்து கேதனை திட்டமிட்டு கொலை செய்தது அம்பலமானது. பேக்கரி நடத்தி வந்த சியாவிற்கு, உலர் பழ வியாபாரம் செய்து வந்த 22 வயதான சேதன் பாபுலால் சௌத்ரி என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் நிச்சயித்த திருமணத்தில் சியாவிற்கு விருப்பம் இல்லாததால், தனது காதலன் சேதனுடன் சேர்ந்து கேதனை லோகட் கோட்டையிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. தற்போது சியா கோயல் மற்றும் அவரது காதலன் சேதன் பாபுலால் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
