பிரசவத்தின் போது வயிற்றில் கத்திரிக்கோலை வைத்து தைத்த டாக்டர்… 1 1/2 வருஷமாக துடித்த இளம் பெண்… ஆப்ரேஷன் தியேட்டரில் பரிதாபமாக போன உயிர்…. பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on தை 5, 2026

Spread the love

பீகார் மாநிலம் மோதிஹாரியில் மருத்துவர்களின் அஜாக்கிரதையால் ஒன்றரை ஆண்டுகளாக வயிற்றில் கத்திரிக்கோலுடன் வாழ்ந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. உஷா தேவி என்ற 25 வயதுப் பெண்ணிற்கு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் சங்கீதா குமாரி என்பவர் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அந்த சமயத்தில், மருத்துவர் எதிர்பாராத விதமாக அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்திரிக்கோலை உஷாவின் வயிற்றிலேயே வைத்துத் தைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு வீட்டிற்குச் சென்ற உஷா தேவிக்குத் தொடர்ந்து கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பலமுறை உள்ளூர் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தும், அந்த கத்திரிக்கோல் மருத்துவர்களின் கண்ணில் படாததால் சாதாரண வலி என்று கூறி மாத்திரைகளை மட்டும் கொடுத்து அனுப்பியுள்ளனர்.

   

அண்மையில் வலி தாங்க முடியாமல் வேறொரு பெரிய மருத்துவமனைக்குச் சென்றபோதுதான், சிடி ஸ்கேன் மூலம் அவரது வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை அவசரமாக அறுவை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

   

ஆனால், அந்த கத்திரிக்கோல் ஒன்றரை ஆண்டுகளாக வயிற்றுக்குள் இருந்ததால், அது குடலின் பல பகுதிகளைக் கிழித்து உடல் முழுவதும் கடுமையான கிருமித் தொற்றை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முறையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் தற்போது போராடி வருகின்றனர்.