மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள மகாராஜ்பூர் காவல் நிலையத்திற்குள், 22 வயதான பிங்கி நாயக் என்ற பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் குடும்பத்தினருக்கு எதிரான தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல்கள் குறித்து புகார் அளித்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்ததாலேயே அவர் இந்த தீவிர முடிவை எடுத்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சம்பவத்தின் பின்னணியில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் மீது எதிர்த்தரப்பினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாகவும், அவர்களுக்கு இடையேயான தொடர் மோதல்கள் குறித்தும் ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் விசாரணையைத் தாமதப்படுத்தியதாகவும், எதிர்த்தரப்பினரின் மிரட்டல்கள் அதிகரித்த நிலையில் நீதி கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலாலேயே அப்பெண் காவல் நிலைய வளாகத்திலேயே விஷம் அருந்தியதாகவும் கூறப்படுகிறது. இக்காட்சிகள் காவல் நிலைய சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளன.
விஷம் அருந்திய அப்பெண் உடனடியாக மீட்கப்பட்டு சத்தர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சத்தர்பூர் எஸ்பி விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, காவல் நிலைய சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்.
