தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் திம்மாபூர் கிராமத்தை சேர்ந்த சுவாதி (28) என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே சுவாதி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து துண்டிகல் என்ற இடத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் கிஷன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். உரிமையாளர் கிஷனுக்கு திருமணம் ஆகி மனைவியும் குழந்தையும் உள்ளன. சுவாதியின் ஒரு மகன் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் மற்றொரு மகன் அவருடன் தங்கி இருந்து அருகில் உள்ள பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கிசனுக்கும் சுவாதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
ஒரு கட்டத்தில் அந்த குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளின் வாடகையையும் வாங்கி சுவாதி செலவு செய்துள்ளார். இது உரிமையாளரின் குடும்பத்திற்கு தெரிந்த சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் சுவாதியை தீர்த்து கட்ட கிஷனின் சகோதரி மகன் ராஜேஷ் திட்டமிட்டுள்ளார். நேற்று முன்தினம் சுவாதியும் அவருடைய இளைய மகனும் வீட்டில் இருந்தபோது திடீரென உள்ளே நுழைந்த ராஜேஷ் தனது நண்பருடன் சேர்ந்து மகன் கண் முன்னே சுவாதியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பிறகு ராஜேஷ் மட்டும் போலீசில் சரணடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ராஜேஷ் நண்பரை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
