இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் விரும்பும் பொருட்கள் அனைத்தும் இருந்த இடத்திலிருந்தே வீட்டு வாசலுக்கே தேடி வரும் சூழல் உருவாகியுள்ளது. அந்த வகையில் சென்னை மணலி அருகே இளம்பெண் ஒருவர் இணையம் வாயிலாக உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அந்த உணவை வாங்குவதற்காக அவர் தனது முகவரியை தவறாகக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.
இதனால், உணவை டெலிவரி செய்ய வந்த கிஷோர் என்ற ஊழியருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அந்த இளம்பெண், டெலிவரி ஊழியரை ஆபாசமாகப் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, அநாகரிகமாக நடந்துகொண்ட அந்தப் பெண்ணிற்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தவறை உணர்ந்த அந்த இளம்பெண் டெலிவரி ஊழியர் கிஷோரைத் தேடிக் கண்டுபிடித்துள்ளார். பொதுவெளியிலும் சமூக வலைதளங்களிலும் தான் நடந்துகொண்ட விதத்திற்கு வருத்தம் தெரிவித்து, கிஷோர் மற்றும் பொதுமக்களிடம் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
