திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, திருமணம் ஆகி வெறும் 13 நாட்களே ஆன நிலையில், குடும்பத் தகராறு காரணமாக மதுபோதையில் தீக்குளித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூலனூர் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த பானுப்பிரியா (29), கணவரை இழந்த நிலையில், ஏழு வயது மகனுடன் வசித்து வந்தார். இவர், திண்டுக்கல் பாளையத்தைச் சேர்ந்த கௌதம் (31) என்பவரைக் காதலித்து வந்தார். கௌதம் மூலனூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
காதலித்து வந்த இருவரும் கடந்த நவம்பர் 3ஆம் தேதி ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன நாள் முதல் கௌதம், பானுப்பிரியா அடிக்கடி செல்போனில் பேசுவதைக் கண்டித்து, எண்ணை மாற்றச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். மேலும், மதுப்பழக்கம் இருந்த கௌதம் தினந்தோறும் மது போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று மது அருந்திவிட்டு பானுப்பிரியாவின் வீட்டிற்கு வந்த கௌதம், இனி சண்டையிட மாட்டேன் என்று கூறி சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், பானுப்பிரியா, காதலின்போது கொடுத்த வாக்குறுதிக்குப் புறம்பாக, கௌதம் மது அருந்துவதையும், தன்னைச் சந்தேகப்படுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி, அவர் திருந்தினால் மட்டுமே சேர்ந்து வாழ முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட கடுமையான தகராறின்போது, ஆத்திரமடைந்த கௌதம், தன்னிடம் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி, தீக்குளிக்கப் போவதாக மிரட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் உடலில் தீப்பற்றியது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரைக் காப்பாற்றித் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கௌதம் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
