உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி பகுதியில் இயங்கி வரும் பிளைவுட் தொழிற்சாலை ஒன்றில், 45 வயதான ஜனக் எனும் தொழிலாளி பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு இயங்கிக்கொண்டிருந்த இயந்திரத்தில் மரம் ஒன்று சிக்கிக்கொண்டதால், அதைச் சரிசெய்வதற்காக அவர் அருகில் சென்றுள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில் சிக்கியிருந்த மரக்கட்டை அதிவேகமாக எகிறி வந்து, ஜனக்கின் தலைப்பகுதியில் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
https://twitter.com/Anxiousvids/status/2082887858088800759
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், ஆலை நிர்வாகத்தின் அலட்சியமே இந்த உயிரிழப்பிற்குக் காரணம் எனப் பலியான தொழிலாளியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பணியாற்றும் தொழிலாளர்களுக்குத் தலைக்கவசம் உள்ளிட்ட எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் (Protective Gear) வழங்கப்படவில்லை என்பதே இத்தகைய அசம்பாவிதத்திற்குக் காரணம் என அவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் உள்ள தொழிலாளர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
