தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, தகுதியிருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். பயனாளிகள் தங்களின் விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளவும், அதற்குத் தீர்வு காணவும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் முதலில் தங்களுக்கு அருகில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் (RDO) அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான சரியான காரணத்தை அதிகாரிகள் விளக்குவார்கள். ஒருவேளை அதிகாரிகள் கூறும் காரணம் தவறானது எனப் பயனாளிகள் கருதினால், அதே அலுவலகத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பெறுவதற்கான மேல்முறையீட்டு மனுவை உடனடியாக அளிக்கலாம் என அமைச்சர் விளக்கியுள்ளார்.
