சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் மன அழுத்தத்தைப் போக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இலவச உளவியல் ஆலோசனைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. தேர்வு குறித்த பயம், பதற்றம் மற்றும் சந்தேகங்களைத் தீர்க்க ‘1800-11-8004’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். இதில் நேர மேலாண்மை மற்றும் தேர்வை எதிர்கொள்ளும் முறைகள் குறித்து ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நிபுணர்கள் வழிகாட்டுவார்கள்.
தொலைபேசி மட்டுமின்றி ‘ஷிக்ஷா வாணி’ என்ற செயலி மூலமாகப் பாட்காஸ்ட் வழியாகவும் மாணவர்கள் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். கடந்த 26 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்படும் இந்தச் சேவை, தேர்வு முடிவுகள் வெளியாகும் காலத்திலும் இரண்டாம் கட்டமாகத் தொடரும். மாணவர்கள் மனரீதியாகத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற உதவும் நோக்கில் இந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
