ஹைதராபாத்தில் உள்ள லங்கர் ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ‘வி கிராண்ட்’ ஹோட்டல் அறையில், 26 வயது மதிக்கத்தக்க ரேணுகா என்ற பெண் வியாழக்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலாராம் பகுதியைச் சேர்ந்தவரான ரேணுகா, குக்கட்பள்ளியில் உள்ள ஒரு கிளப்பில் நடனக் கலைஞராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, ஏழு வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாகத் தனது கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, ரேணுகாவிற்கும் கோல்கொண்டா பகுதியைச் சேர்ந்த ஃபாரூக் என்பவருக்கும் இடையே ஒரு மதுபான விடுதியில் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஆறு மாதங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று (ஜூன் 3) மாலை இருவரும் அந்த ஹோட்டல் அறையில் ஒன்றாகத் தங்கியுள்ளனர். அங்கு பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட பிறகு, ஃபாரூக் வேறொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ஃபாரூக்கிற்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அறையில் தனியாக இருந்த ரேணுகா, நள்ளிரவு 12:30 மணியளவில் தனது தோழி ஒருவருக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது, அடுத்த நாள் தனது பிறந்தநாள் என்று கூறியவர், “உனக்காக ஒரு பிறந்தநாள் பரிசு வைத்ததுள்ளேன்” என்று கூறிவிட்டு, திடீரென ஹோட்டல் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள லங்கர் ஹவுஸ் போலீசார், காதலன் ஃபாரூக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேணுகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
