நெஞ்சை உலுக்கும் கொடூரம்… 14 ஆண்டு கால தண்ணீர் சண்டை… பழிக்குப்பழியாக தந்தையின் தலை துண்டிப்பு… 5 வயது பிஞ்சு குழந்தை நசுங்கி பலி – அலறும் நெல்லை…!!

By Swetha on ஆடி 4, 2026

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் ஜெயராஜ் ஆகியோர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காளிமுத்து தனது இரு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கார் மற்றும் பைக்குகளில் வந்த கும்பல் அவர்கள் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் 5 வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உயிருக்கு போராடிய காளிமுத்துவை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி, தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

இந்த இரட்டை கொலைக்கு 14 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட முன்விரோதமே முக்கிய காரணம் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு மூலச்சி கிராமத்தில் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, 2012ஆம் ஆண்டு எதிர்த்தரப்பைச் சேர்ந்த பெருமாள் பாண்டியன் என்பவர் காளிமுத்து தரப்பினரால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த பழிவாங்கலுக்கு அஞ்சி பல ஆண்டுகளாக வெளியூரில் வசித்து வந்த காளிமுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். இதை நோட்டமிட்ட எதிர்த்தரப்பினர், பழிக்குப்பழியாக இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

   

பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை விசாரிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தீவிரமாக தேடப்பட்டு வந்தனர். இந்த நிலையில், இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக மகேந்திரன், கொக்கிகுமார் மற்றும் முத்துச்செல்வன் ஆகிய மூன்று பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொடூர குற்றத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைப் பிடிப்பதற்காக காவல்துறை தரப்பில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.