“தனிமையில் இருக்கலாம் வா.. போனில் அழைத்த காதலி”… ஹோட்டலுக்கு சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆக்ராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

By Nanthini on சித்திரை 22, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவைச் சேர்ந்த 29 வயது பிரீத்திக்கும், அஜய் என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்து, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு முன்பாக பிரீத்தி, கில்லோ என்ற தனது தூரத்து உறவினரைக் காதலித்துள்ளார். ஆனால், கில்லோவின் நடத்தை சரியில்லாத காரணத்தால் அந்த உறவைத் துண்டித்துவிட்டு, பெற்றோரின் விருப்பப்படி வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்.

இருப்பினும், பிரீத்தியின் திருமண வாழ்க்கையைச் சிதைக்கும் நோக்கில் கில்லோ தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்த காலத்தில் எடுக்கப்பட்ட அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டி, கடந்த பல ஆண்டுகளாக பிரீத்தியை கில்லோ மிரட்டி வந்துள்ளார். அந்த ஆதாரங்களை அழிக்க வேண்டும் என்றால் தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என அவர் தொடர்ந்து கட்டாயப்படுத்தியுள்ளார். ஒருகட்டத்தில் கில்லோவின் இந்த டார்ச்சரைத் தாங்க முடியாத பிரீத்தி, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண எண்ணி அவரைக் கொலை செய்யத் துணிச்சலான திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்.

   

தனது திட்டத்தின்படி, டெல்லியில் இருந்த கில்லோவைத் தொடர்பு கொண்ட பிரீத்தி, ஆசை வார்த்தைகளைக் கூறி ஆக்ராவிற்கு அழைத்துள்ளார். கில்லோவும் ஆக்ராவின் மால்புரா பகுதியில் உள்ள தாஜ்பத் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். வீட்டிலிருந்து கத்தி மற்றும் சுத்தியலை மறைத்து எடுத்துச் சென்ற பிரீத்தி, ஹோட்டல் அறைக்குள் கில்லோவுடன் பீர் அருந்தியுள்ளார். கில்லோ போதையில் இருந்த சமயம் பார்த்து, தனது பையிலிருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்ததோடு, சுத்தியலால் சுமார் 15 முறை தலையில் ஓங்கி அடித்துக் கொடூரமான முறையில் அவரைக் கொலை செய்துள்ளார்.

   

கொலைக்குப் பிறகு கில்லோவின் செல்போனை அடித்து நொறுக்கிய பிரீத்தி, தானே முன்வந்து ஹோட்டல் ஊழியர்களிடம் கொலையை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்துத் தகவல் அறிந்த மால்புரா போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது பிரீத்தியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ள போலீசார், இந்தத் திட்டமிட்ட கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் காதலனின் அத்துமீறலால் ஒரு பெண் கொலைகாரியாக மாறியுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.