ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்லமுத்து என்பவருக்கும், காட்டுப்பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த ஷர்மிளாவுக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஷர்மிளாவின் கள்ளக்காதல் விவகாரம் மற்றும் பணப்பிரச்சினை காரணமாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு, கடந்த 7 மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே, துபாயில் ஆசிரியையாகப் பணிபுரிந்து ஊருக்குத் திரும்பிய ஷர்மிளாவின் தாய் பத்மாவதி, மகளைக் கணவருடன் சேர்ந்து வாழும்படி அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று பேர குழந்தைகளைப் பார்க்க வந்த மாமியார் பத்மாவதியையும், ஷர்மிளாவையும் வைகை நகர் பகுதியில் வைத்து வழிமறித்த செல்லமுத்து, கள்ளக்காதல் குறித்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஷர்மிளாவையும், தடுக்க வந்த மாமியார் பத்மாவதியையும் பிஞ்சு குழந்தைகளின் கண்முன்னே சரமாரியாக வெட்டிக் கொடூரமாகக் கொன்றார். பட்டப்பகலில் நடந்த இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பியோட முயலாமல் கேணிக்கரை காவல் நிலையத்தில் சரணடைந்த செல்லமுத்துவைக் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
