தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அதிமுகவிற்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த அதிமுக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது. இதனால் தேசிய கட்சியான பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக வெற்றி பெறுவதற்கான பல வியூகங்களை வகுத்து வருகின்றார். அதற்காக பல கட்சிகளிடமும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்.
இதனிடையே நேற்று அதிமுக கூட்டணியில் யாரும் எதிர்பாராத விதமாக பாமக தரப்பில் அன்புமணி கூட்டணியை உறுதி செய்தார். இபிஎஸ்ஐ நேற்று நேரில் சந்தித்த அன்புமணி பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல கூட்டணி கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல வியூகங்களை வகுத்து வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மேடையில் அதிமுக கூட்டணியில் NDA ஆட்சி அமைக்கும் என பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை குறிப்பிடாதது கவனம் பெற்றது. இதனால் தேர்தலுக்குப் பிறகு அதிமுக தலைமையை மாற்றும் திட்டம் பாஜகவிடம் இருக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார். இருந்தாலும் கூட்டணி சூழல் பாதிக்கப்படும் என்பதால் பாஜக இப்போது அதை வெளிப்படையாக சொல்லாது என்றும் அவர் கூறினார்.
