கான்பூரில் தனது கணவர் ஹிமான்ஷு குப்தா மற்றும் அவரது பெற்றோருக்கு மனைவி தினமும் உணவிலும் குடிநீரிலும் மெல்லக் கொல்லும் விஷத்தைக் கலந்து கொடுத்து வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெற்றோரால் விமரிசையாக நடத்தி வைக்கப்பட்ட திருமணத்திற்குப் பிறகு, குடும்பத்தினர் அனைவரும் தொடர்ந்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். இதைக் கண்டு சந்தேகமடைந்த மருத்துவர்கள் நடத்திய இரத்தப் பரிசோதனையில், அவர்களின் உடலில் விஷம் கலந்திருப்பது மருத்துவ அறிக்கையின் மூலம் உறுதியானது.
சந்தேகத்தை உறுதிப்படுத்திக்கொள்ள ஹிமான்ஷு தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினார். அதில் அவரது மனைவி உணவில் விஷத்தைக் கலக்கும் காட்சிகள் பதிவாகி, இந்த கொடூர செயல் வெளிச்சத்திற்கு வந்தது. ஆதாரங்களுடன் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளையில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், கணவர் ஹிமான்ஷு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் மன உலைச்சல் ஏற்படுத்தியதாக அந்த பெண் எதிர் புகார் அளித்துள்ளார். இதனால் காவல்துறையினர் இரண்டு தரப்பு புகார்களையும் தீவிரமாக ஆய்வு செய்து, வழக்கின் உண்மைத் தன்மையைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
