மத்தியப் பிரதேச மாநிலம் தேவ்ரி நகரில் கடந்த ஆறு மாதங்களாக மர்மமாக நீடித்த இளைஞனின் காணாமல் போன வழக்கு, தற்போது ஒரு கழிவுநீர் தொட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு மற்றும் எலும்புத் துண்டுகளால் திடுக்கிடும் திருப்பத்தை எட்டியுள்ளது. சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரான பிரின்ஸ் பால்மிகி, கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் காணாமல் போனதாக அவரது மனைவி துளசி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண காணாமல் போன வழக்காகக் கருதப்பட்ட நிலையில், பிரின்ஸின் குடும்பத்தினர் அளித்த தொடர் புகார்களின் அடிப்படையில் சோயிப் என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது கொடூரமான கொலைச் சம்பவம் அம்பலமானது.
விசாரணையில், பிரின்ஸின் மனைவி துளசிக்கும் சோயிப்புக்கும் இடையே திருமணத்திற்கு முன்பே இருந்த காதல் தொடர்பு, திருமணத்திற்குப் பிறகும் நீடித்தது தெரியவந்தது. திருமணமான ஒரே மாதத்தில் துளசியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கணவன்-மனைவி இடையே சண்டைகள் வெடித்தன. இதனால், சோயிப் ஒரு திட்டமிட்ட சதிவலையைப் பின்னியுள்ளார். பிரின்ஸுடன் வேண்டுமென்றே நண்பராகப் பழகிய சோயிப், அவருக்கு ‘ஸ்மாக்’ எனும் போதைப்பொருளைப் பழக்கப்படுத்தியுள்ளார். பிரின்ஸ் போதையில் இருக்கும் நேரங்களில், சோயிப் துளசியைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் பிரின்ஸுக்குத் தெரியவர, அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சோயிப், பிரின்ஸைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி, பிரின்ஸுக்கு அதிக அளவு போதை மருந்து கொடுத்து மயக்கமடையச் செய்த சோயிப், அவரைப் படுகொலை செய்து தனது வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் உடலை வீசியுள்ளார். பிணம் அழுகும் நாற்றம் வெளியே தெரியாமல் இருக்க குப்பைகளைக் கொட்டியதுடன், உடல் விரைவில் சிதைவதற்காக அதன் மீது தொடர்ந்து உப்பைக் கொட்டி வந்துள்ளான்.
கொலைக்குப் பிறகு சோயிப் மற்றும் துளசி ஆகிய இருவரும் குஜராத் மாநிலத்திற்குத் தப்பிச் சென்று ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, பிரின்ஸின் குடும்பத்தினர் போலீஸாரிடம் ஆதாரங்களை ஒப்படைத்தனர். இதன் தொடர்ச்சியாக சோயிப் கைது செய்யப்பட்டு, அவர் அடையாளம் காட்டிய கழிவுநீர் தொட்டியிலிருந்து பிரின்ஸின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மீட்கப்பட்டன. இந்த வழக்கில் துளசியின் பங்களிப்பு குறித்தும், வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
