திமுகவின் “சைலன்ட்” ஆட்டம்… கருணாஸ் முதல் கொமதேக வரை.. யாருக்கு எத்தனை தொகுதி?…. அறிவாலயத்தில் நடந்து முடிந்த சீக்ரெட் டீல்….!

By Nanthini on மாசி 13, 2026

Spread the love

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ குழு இன்னும் அமைக்கப்படாத நிலையிலும், திரைக்குப் பின்னால் பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு ஆகியோர் மூலமாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்குவது குறித்து ஓரளவிற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், சிறிய கூட்டணிக் கட்சிகளான வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதில் ஒரு சுவாரஸ்யமான திருப்பமாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனக்கு பண்ருட்டி தொகுதிக்கு பதிலாக நெய்வேலி தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குழு அமைப்பதற்கு முன்பே அமைச்சர்கள் வாயிலாக இந்த “டீல்” முடிக்கப்பட்டுவிட்டதால், வரும் நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மிக விரைவாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.