சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த 29 வயதான புவனேஸ்வரி, ஆவடி பெட்டாலியன் பிரிவில் பணியாற்றி வந்தவர். கடந்த சில மாதங்களாக எழும்பூர் குற்றப்பிரிவில் அயல் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிலம்பரசன் என்பவரை காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணமான தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது வாழ்க்கையில், சிலம்பரசனின் சந்தேக புத்தியால் விரிசல் ஏற்படத் தொடங்கியது.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான சிலம்பரசன், தனது மனைவி புவனேஸ்வரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் குடித்துவிட்டு வந்து அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. “என்னைத் தவிர வேறு யாருடன் பழகுகிறாய்?” என்று கேட்டு புவனேஸ்வரியை அடிக்கடி தாக்கி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவும் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான புவனேஸ்வரி, நள்ளிரவில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தத் தற்கொலைக்குக் குடும்பத் தகராறு மட்டுமின்றி, பணப் பிரச்சனையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். புவனேஸ்வரி தனது நண்பர் சிவமூர்த்தி என்பவருக்குக் கொடுத்த பணத்தை மீண்டும் கேட்டுப் பெறும்படி சிலம்பரசன் வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக புவனேஸ்வரி திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரும் அளித்துள்ளார். கணவரின் தொடர் டார்ச்சர் மற்றும் இந்தப் பணப் பிரச்சனைகள் சேர்ந்து அவரை இந்த விபரீத முடிவை எடுக்கத் தூண்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தகவலறிந்து வந்த எழும்பூர் போலீசார் புவனேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்துகொண்ட சமயத்தில் அவரது கணவர் அதிக மதுபோதையில் இருந்ததால், அவரிடம் விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான உண்மையான பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடமை உணர்வுடன் பணியாற்றிய ஒரு பெண் காவலர், குடும்ப வன்முறை காரணமாகத் தன்னுயிரை மாய்த்துக் கொண்டது சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
