தலைநகர் ஜெய்ப்பூரின் திரிவேணி நகர் சிறுபாலத்தின் கீழ் வாலிபர் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியையும் அவளது கள்ளக்காதலனையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மகேஷ் ஜடாவ் என்ற தொழிலாளி, தனது மனைவி ஆர்த்திக்கும் மோனு சௌத்ரி என்பவனுக்கும் இருந்த கள்ள உறவைக் கண்டுபிடித்து எச்சரித்துள்ளார். தங்களின் காதலுக்குத் தடையாக இருந்த கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஆர்த்தி, தனது காதலன் மோனுவிடம் வெறும் 1200 ரூபாய் பணம் கொடுத்துக் கொலை செய்யத் தூண்டியுள்ளார். இதற்காக மகேஷுடன் நயவஞ்சகமாக நட்பு பாராட்டிய மோனு, கடந்த ஜூன் 11 அன்று அவரை மது குடிக்க அழைத்துச் சென்று, அதிகப்படியாக மதுவைக் கொடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலை முடிந்ததும் இன்ஸ்டாகிராம் அழைப்பு மூலம் ஆர்த்தியிடம் “வேலை முடிந்தது” எனத் தெரிவித்துவிட்டு மோனு தப்பியோடியுள்ளார். இந்த கொடூரக் கொலை குறித்து விசாரணையில் இறங்கிய காவல் ஆய்வாளர் மகேந்திர சிங் தலைமையிலான தனிப்படை, அப்பகுதியில் இருந்த 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை அக்குவேறு ஆணிவேறாக ஆய்வு செய்தது. போலீசாரிடம் சிக்காமல் இருக்கத் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே மத்தியப் பிரதேசத்திற்குத் தப்ப முயன்ற கொலையாளி மோனுவை, போலீசார் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று ரிங் ரோடு பகுதியில் மடக்கிப் பிடித்தனர். கைதான கள்ளக்காதலர்கள் இருவரிடமும் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
