ரிஷிகேஷில் நதியின் வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்த சுற்றுலாப் பயணி ஒருவரை, ரோஹித் லக்கேரா என்ற ராஃப்டிங் வழிகாட்டி தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி வருகிறது. போதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த சுற்றுலாப் பயணி தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்ட ரோஹித், கயாக் எனப்படும் தனது சிறிய மீட்புப் படகை அதிவேகமாகச் செலுத்தி அவரை நெருங்கியுள்ளார். மீட்பின் போது, பதற்றமடைந்த சுற்றுலாப் பயணி ரோஹித்தின் படகைப் பலமாகப் பற்றியதால், நிலைதடுமாறி ரோஹித் தண்ணீரில் விழுந்த போதிலும், விடாமுயற்சியுடன் மீண்டும் படகில் ஏறி, தனது சக தோழனின் உதவியோடு அந்த நபரை பத்திரமாகக் கரை சேர்த்துள்ளார்.
உயிர்பிழைத்த அந்த சுற்றுலாப் பயணி, தன்னை மீட்ட வழிகாட்டியின் கால்களில் விழுந்து நன்றி செலுத்த முயன்ற நெகிழ்ச்சியான காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. ‘சீஹாக் அட்வென்ச்சர்ஸ் நிறுவனம் இந்த வீரதீர மீட்பு வீடியோவைப் பகிர்ந்து, ரோஹித்தின் சமயோசித புத்தியையும் தைரியத்தையும் பாராட்டியுள்ளது. இணையவாசிகள் பலரும் இந்த மீட்பர்களைக் கடவுளின் தூதர்களாக வர்ணித்து வரும் நிலையில், இதுவரை 52 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், லட்சக்கணக்கான விருப்பங்களையும் பெற்றுள்ள இந்த வீடியோ, நீர்நிலை சுற்றுலாக்களின் போது போதையிலோ அல்லது நீச்சல் தெரியாமலோ ஆற்றில் இறங்குவது எவ்வளவு ஆபத்தானது என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
