ஹிட் ஜோடியாக இருந்த நாகேஷும் மனோரமாவும் பிரிய காரணமாக அமைந்த சம்பவம்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார். அவருக்கு பின் ஒருவர் வர முன்னணில் இருந்தவரின் மார்க்கெட் காலியாகும். அப்படி சந்திரபாபுவுக்கு அடுத்து முன்னணி நகைச்சுவை நடிகராக வந்தவர் நாகேஷ்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

   

நாகேஷ் முன்னணி நடிகராக இருந்த போது அவரோடு பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா. அவர்களின் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து அந்த ஜோடிக்கென்றே ஒரு கமர்ஷியல் மதிப்பு உருவானது. அதனால் அந்த ஜோடியை ஒன்றாக வைத்து காமெடிக் காட்சிகளை எழுத ஆரம்பித்தனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து நடிப்பதை நிறுத்தினர். அதற்குக் காரணம் நாகேஷுக்கு எதிரான ஒரு வழக்கில் எதிராளிக்கு ஆதரவாக மனோரமா சாட்சி சொன்னதுதான் என்று சொல்லப்படுகிறது. இதனால் பல ஆண்டுகளாக இந்த ஜோடி திரையில் இணைந்து நடிக்கவேயில்ல.

பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் இருவரும் மீண்டும் ஜோடியாக இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் நடித்தனர். அப்போதும் அந்த படத்தில் இருவரும் இணைந்து இருப்பது போன்ற காட்சிகள் அதிகமாக இல்லாதவாறுதான் திரைக்கதை அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த படத்தில் நடிக்கும் போது மனோரமா “நாகேஷ் சாருக்கு ரொம்ப உடம்பு முடியல. அவருக்கு சீக்கிரமா ஷூட் வச்சு அனுப்புப்பா” என தன்னிடம் கூறியதாக இயக்குனர் சிம்புதேவன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.