தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அதுமட்டுமில்லாமல அவர்களை நட்சத்திரங்களாக உருவாக்கினார். அதற்குக் காரணம் முன்னணி நடிகர்களை போட்டால் அவர்களை வைத்து நாம் எடுக்க நினைத்ததை எடுக்க முடியாது என அவர் நம்பியதே அதற்கு காரணம். அவர் அறிமுகப்படுத்திய ராதா, ரேவதி, ராதிகா, ரேகா உள்ளிட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் என பெயரெடுத்தனர்.
அப்படி அவர் மண்வாசனை படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர்தான் நடிகர் பாண்டியன். மண்வாசனை படத்துக்காக நடிகர் தேர்வு நடந்த போது எதேச்சையாக ஒரு கோயில் வாசலில் வளையல் கடை வைத்திருந்த பாண்டியனைப் பார்த்து தேர்வு செய்துள்ளார். அதே போல கேரளாவைச் சேர்ந்த ஆஷா என்ற பெண்ணை அறிமுக நடிகையாக தேர்வு செய்து அவருக்கு ரேவதி என்ற பெயரையும் கொடுத்தார்.
பாரதிராஜா படங்களில் நடிகர்கள் அவர் எப்படி நடித்துக் காட்டுகிறாரோ அதை திருப்பிச் செய்தால் போதும். அப்படியும் சில நடிகர்கள் நடிப்பில் சொதப்பும்போது பாரதிராஜா அவர்களை கோபத்தில் அடித்த சம்பவமும் உண்டு. பலர் நான் பாரதிராஜாவிடம் அடிவாங்கி இருக்கிறேன் என பின்னாளில் பேட்டியில் சொல்லியதுண்டு.
அதைப் போல ஒரு சம்பவத்தை நடிகை ரேவதியும் பகிர்ந்துள்ளார். மண்வாசனை படத்தில் ஒரு காட்சியில் பாண்டியனுக்கு சரியாக நடிக்க வரவில்லையாம். அதனால் கோபப்பட்டு பாரதிராஜா அவரை அடித்து விட்டாராம். அதன் பின்னர்தான் பாண்டியன் அந்த காட்சியில் சொல்லிக் கொடுத்தது போல நடித்தாராம். ஆனால் நடிப்பில் ஃபயரான ரேவதி தன்னுடைய வேடத்தை சிறப்பாக நடித்ததால் பாரதிராஜாவின் சிறப்பு கவனிப்பு எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லையாம்.