CINEMA
எம் ஜி ஆர் தன் கட்சியில் சேர சொன்னபோது மறுத்த வாலி… கண்ணதாசன் சொன்ன மூன்று அட்வைஸ்தான் காரணமா?
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில் வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார். இதனால் அவரை ரசிகர்கள் வாலிபக் கவிஞர் என்றே அழைத்தனர்.
ஆனால் எந்தகாலத்திலும் அவர் நம்பர் 1 கவிஞராக இருந்தார். எப்போதும் இரண்டாவது இடத்திலேயே இருந்தார். ஆனால் 60 ஆண்டுகளில் அவருக்கு பாடல் எழுத வாய்ப்புக் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை உருவானதே இல்லை. அந்த அளவுக்கு இறக்கும் வரையிலும் பிஸியாக இருந்தார்.
வாலியின் தனிச்சிறப்பே அவர் யாரிடமும் சண்டை போட்டு பிரிந்து செல்ல மாட்டார் என்பதுதான். எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா தொடங்கி அனிருத் வரை அவர் பாடல்கள் எழுத காரணமாக அவரின் இந்த பழகும் தன்மைதான். சினிமாவில் நுழைந்து ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் எழுதிக் குவித்திருந்தாலும் ஆரம்பத்தில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் எளிதில் கிடைக்கவில்லை.
தன் திரைவாழ்க்கையில் அவர் எம் ஜி ஆருக்குதான் அதிக பாடல்களை எழுதினார். எம் ஜி ஆர் பாட்டுகள் ஹிட்டானதால் அவர் ரசிகர்களிடம் வாலிக்கு நல்ல மரியாதை இருந்தது. இந்நிலையில்தான் எம் ஜி ஆர் அண்ணா திமுக என்ற கட்சியை ஆரம்பித்த போது அதில் தனக்கு நெருக்கமான சினிமா வட்டாரத்தினரை சேர சொல்லி கேட்டுள்ளார். அதில் வாலியும் ஒருவர்.
எம் ஜி ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தபோது வாலி அவரின் கட்சியில் சேரமாட்டேன் என பணிவுடன் மறுத்துவிட்டாராம். அதற்கு கண்ணதாசன்தான் ஒரு வகையில் காரணம் என சொல்லப்படுகிறது. தொழிலில் தன்னை விட சீனியரான கண்ணதாசனோடு ஒருமுறை வெளிநாடு சென்றுள்ளார் வாலி. அப்போது கண்ணதாசன் நீ உன் வாழ்க்கையில் இந்த மூன்றை மட்டும் செய்துவிடாதே என அட்வைஸ் செய்துள்ளார்.
அவர் சொன்ன மூன்று விஷயங்கள் “ஒன்றிருக்க இன்னொன்ற நாடாதே.. சொந்தமாக படம் தயாரிக்காதே.. எந்த அரசியல் கட்சியிலும் சேராதே..” என அன்புக் கட்டளை போட்டுள்ளார். இதை தன் வாழ்க்கையின் கடைசி நாள் வரை பின்பற்றியுள்ளார். கண்ணதாசன் இப்படி மூன்று கட்டளைகள் போடக் காரணம் மூன்றையுமே செய்து கையை சுட்டுக்கொண்டவர் அவர் என்பதுதான்.