தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் இளையராஜா. இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தியுள்ளார். இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் அவரின் பயோபிக் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த படத்துக்கும் அவரே இசையமைக்கிறார். இளையராஜாவைப் பற்றி தெரிந்தவர்களுக்கு அவர் தன்னுடைய வாழ்க்கையை இசைக்கும் ஆன்மீகத்துக்கும் மட்டும் ஒப்புக் கொடுத்து வாழ்பவர் என்பது தெரியும். தன்னுடைய வாழ்க்கையை ஒரு துறவி போல வாழ்ந்து வருகிறார்.
ஆனால் இளையராஜா சினிமாவில் வெற்றி பெற்ற ஆரம்ப காலங்களில் பார்ட்டி கலாச்சாரங்களில் அவரும் ஈடுபட்டு வந்திருக்கிறார். அவ்வப்போது குடிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது என்று அவரோடு பழகிய நண்பர்கள் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் இளையராஜா குடியை நிறுத்த காரணமாக இருந்த ஒரு சம்பவம் பலரும் அறியாதது.
பாரதிராஜா இயக்கிய சிவப்பு ரோஜாக்கள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த படத்தின் பார்ட்டி நடிகர் தியாகாராஜனுக்கு சொந்தமான வீட்டில் நடந்துள்ளது. அப்போது மிதமான போதையில் இருந்த ரஜினிகாந்த் மற்றும் பாரதிராஜா ஆகியோருக்கு நடுவே வார்த்தை மோதல் எழுந்து, அது கைகலப்பு வரை சென்றுள்ளது. இதில் ஒருவருக்கு ஒருவர் தாக்கும் அளவுக்கு கூட உரையாடல்கள் எல்லை மீறி சென்றுள்ளன. வீட்டை விட்டு வெளியே வந்து காரசாரமாக பேசிக்கொண்டு அந்த பார்ட்டி மோசமான ஒரு சூழலில் முடிந்துள்ளது. அந்த பார்ட்டியில் இளையராஜாவும் இருந்துள்ளார்.
அவருக்கு இந்த சண்டை சுத்தமாக பிடிக்கவில்லையாம். அன்றில் இருந்து தான் குடிப்பதில்லை என்ற முடிவை எடுத்தாராம். அதன் பிறகு அவர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று வந்த பின்னர் வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா என ஆளே மாறி அசைவ உணவு உண்பதையும் கைவிட்டுள்ளார். இப்படி இளையராஜா குடியை விடுவதற்கு ஒரு மதுபார்ட்டி முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.