மெட்டா நிறுவனம் தனது பயனர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆண்ட்ராய்டு 6.0-க்குக் குறைவான இயங்குதளம் கொண்ட பழைய ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ்அப் (WhatsApp) சேவை செயல்படாது. குறிப்பாக, ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 ஆகிய பதிப்புகளில் இயங்கும் போன்களுக்கு வழங்கப்படும் ஆதரவை வாட்ஸ்அப் நிறுத்திக்கொள்கிறது. இந்த அதிரடி மாற்றம் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்படும் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற கூடுதல் அம்சங்களை வழங்குவதற்குப் பழைய மென்பொருள் (Software) மற்றும் ஹார்டுவேர் (Hardware) தொழில்நுட்பங்கள் போதுமானதாக இல்லை என்பதே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மெட்டா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, தனிப்பட்ட வாட்ஸ்அப் மெசஞ்சர் பயனர்களுக்கு மட்டுமல்லாமல், வாட்ஸ்அப் பிசினஸ் (WhatsApp Business) கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய பதிப்புகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இது தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுவிட்டதாக மெட்டா தெரிவித்துள்ளது. முக்கியமான உரையாடல்கள் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற மீடியா கோப்புகளை இழக்காமல் இருக்க, பயனர்கள் தங்களது சாட்களை உடனடியாக ‘பேக்கப்’ (Backup) செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆண்ட்ராய்டு 6.0 அல்லது அதற்கு மேலான பதிப்பிற்கு அப்டேட் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள், வாட்ஸ்அப் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்த புதிய ஸ்மார்ட்போன்களுக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
