விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்!… “நாங்கள் கசியவிடவில்லை.. இது நீதிமன்ற முத்திரையே இல்லையே”… நீதிமன்றத்தின் அதிரடி விளக்கம்…!!

By Muthu Mani on சித்திரை 16, 2026

Spread the love

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து மனு செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கசிந்தது தொடர்பான விவகாரம், தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. வழக்கமாக குடும்ப நல நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் ரகசியமாக வைக்கப்படும் நிலையில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த ஆவணம் இணையத்தில் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் ஆதித்ய சோழன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் தற்போது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.

நீதிமன்றம் அளித்துள்ள பதிலில், இந்த மனு கசிந்தது தொடர்பாக இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட தரப்பினர் இது குறித்து எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தானாக முன்வந்து (Suo Motu) வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மனுதாரர் தரப்பில் ரகசிய விசாரணை (In-camera proceedings) கோரப்பட்டிருந்த போதிலும், ஆவணம் கசிந்தது பற்றி அவர்கள் மௌனம் காப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

   

குறிப்பாக, சமூக வலைதளங்களில் பரவிய அந்த விவாகரத்து மனுவில் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ முத்திரை ஏதும் இடம்பெறவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுவாக நீதிமன்றத்தால் வழங்கப்படும் ஆவணங்களில் முத்திரை கட்டாயம் இருக்கும் நிலையில், முத்திரை இல்லாத இந்த ஆவணம் நீதிமன்ற ஊழியர்களால் கசியவிடப்படவில்லை என்பது உறுதியாகிறது. எனவே, இது நீதிமன்றத்திற்கு வெளியே இருந்து திட்டமிட்டு பரப்பப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

   

இந்த ஆதாரங்களை முன்வைத்து வழக்கறிஞர் ஆதித்ய சோழன் கூறுகையில், இந்த மனு சங்கீதா தரப்பிலிருந்தே திட்டமிட்டு கசியவிடப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகத் தனது வாதத்தை முன்வைத்துள்ளார். இருப்பினும், நடிகர் விஜய் தரப்பிலிருந்தோ அல்லது சங்கீதா தரப்பிலிருந்தோ இதுவரை இது தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அல்லது புகாரும் அளிக்கப்படவில்லை. இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.