தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ளது. திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் சென்னையின் 16 தொகுதிகளில் 14-ஐக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்த தவெக, தனது முதல் அமைச்சரவையிலேயே தலைநகருக்குப் பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளது. முதலமைச்சர் விஜய் (பெரம்பூர்), புஸ்ஸி ஆனந்த் (தி.நகர்), ஆதவ் அர்ஜுனா (வில்லிவாக்கம்), ஆடிட்டர் வெங்கடரமணன் (மயிலாப்பூர்) மற்றும் ஏ. ராஜ்மோகன் (எழும்பூர்) எனச் சென்னையைச் சேர்ந்த 5 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். நிர்வாக ரீதியாகச் சென்னையை வலுவாகத் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த முன்னுரிமை வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
இருப்பினும், இந்த மகிழ்ச்சியான தருணத்திற்கு இடையே ‘ஜெயண்ட் கில்லர்’ என்று அழைக்கப்படும் வி.எஸ். பாபுவின் அதிருப்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த வி.எஸ். பாபுவுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படாதது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலினையே வீழ்த்திய ஒருவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் வி.எஸ். பாபு தரப்பில் மேலோங்கி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 9 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலில், மண்டல வாரியான சமநிலை மற்றும் சமூகப் பிரதிநிதித்துவத்தைக் கருத்தில் கொண்டே அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கட்சித் தலைமை விளக்கம் அளித்துள்ளது. கே.ஏ. செங்கோட்டையன் போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள் ஒருபுறமும், நிர்மல் குமார், டி.கே. பிரபு மற்றும் கீர்த்தனா போன்ற இளைய தலைமுறையினர் மறுபுறமும் என ஒரு கலவையான அமைச்சரவையை விஜய் அமைத்துள்ளார். வி.எஸ். பாபுவின் வெற்றி மகத்தானது என்றாலும், பல்வேறு அரசியல் கணக்கீடுகளால் முதற்கட்டப் பட்டியலில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தற்போது அதிருப்தியில் இருக்கும் வி.எஸ். பாபுவைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் தவெக மேலிடம் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. அவருக்குக் கட்சியின் மிக முக்கியமான பதவி வழங்கப்படலாம் அல்லது வரும் காலங்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போது முன்னுரிமை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்தியுள்ள விஜய், தனது கட்சியின் ‘வெற்றி நாயகனை’ எவ்வாறு கையாண்டு இந்த அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார் என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
