திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது தந்தை அய்யா கண்ணுக்கு சொந்தமாக உள்ள ஒன்றரை சென்ட் வீட்டுமனைக்கு தனது பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பாஸ்கர் மனு அளித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த கிராம நிர்வாக அலுவலர் ஸ்டால்வின் பட்டா பெயர் மாற்றம் செய்ய பாஸ்கரிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து பாஸ்கர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பாஸ்கர் ஸ்டால்வினிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஸ்டால்வினை கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஸ்டால்வினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
