கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தை சேர்ந்த லோகித்ஷவா என்பவருடைய மனைவி ரேகா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் ரேகா ஒரு கால் சென்டரில் வேலை பார்த்து வந்தார். அவரது சிபாரிசின் பெயரில் அதே அலுவலகத்தில் ரோகித்துக்கும் கார் டிரைவர் வேலை கிடைத்துள்ளது. இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ரேகா தன்னுடைய மூத்த மகளுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்து அவருடைய கணவர் ரேகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென ஆத்திரமடைந்த லோகித் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து ரேகா மீது சரமாரியாக தாக்கியுள்ளார்.
தனது மகள் கண்முன்னே சுமார் 11 முறை ரேகாவை கத்தியால் குத்தி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த ரேகாவை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள ரோகித்தை வலை வீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ரேகாவின் மகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் மனநல ஆலோசனை வழங்குவதற்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
