நூறாண்டு கால தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற ஒரு ஆளுமை என்றால் கண்ணை மூடிக்கொண்டு இளையராஜாவின் பெயரை சொல்லலாம். இசையமைப்பாளராக அவர் அறிமுகமானதில் இருந்து இப்போது வரை அவர் செய்திருக்கும் சாதனைகள் உலக சினிமாவிலேயே எவரும் இதுவரை படைக்காத சாதனைகள்.
இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்கள் எல்லோரையும் விட அதிக பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார்.
இளையராஜாவின் படைப்புத்திறன் உச்சத்தில் இருந்த காலம் என்றால் அது 70 களில் இறுதியில் இருந்து 90 களின் தொடக்கத்தில் ரஹ்மானின் அறிமுகம் வரை என்று சொல்லலாம். அதன் பின்னரும் அவர் தீவிரமாக இயங்கினாலும் அவரின் புகழ் உச்சத்தில் இருந்த காலம் என்றால் அது 80கள்தான். அப்போதெல்லாம் ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக 50 படங்கள் வரை இசையமைத்துள்ளார். இதனால் அவருக்கு ஒருநாள் கூட ஓய்வு கிடைக்காத சூழலே இருந்துள்ளது.
அப்போதெல்லாம் ஒரு படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார் என்றாலே அதை வினியோகஸ்தர்கள் வாங்கிவிடுவார்கள். அந்த அளவுக்கு அவர் வியாபாரத்தில் தாக்கம் செலுத்தினார். இந்நிலையில்தான் விஜயகாந்தின் பூந்தோட்டக் காவல்காரன் படத்துக்கு இளையராஜா இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
படம் முடிந்ததும் அதைப் போட்டு பார்த்து பின்னணி இசையமைக்க முடிவு செய்துள்ளார். ஆனால் படத்தைப் பார்த்த அவருக்கு படம் சுத்தமாகப் பிடிக்கவில்லையாம். அதை அப்போது அவரோடு படம் பார்த்த இயக்குனர் கோகுல கிருஷ்ணாவிடம் தெரிவித்துள்ளார். அவர் பூந்தோட்டக் காவல்காரன் படத்தை வாங்கிய அடைக்கல ராஜ் என்ற விநியோகஸ்தரிடம் சொல்லிவிட்டாராம். அதனால் அவர் தயாரிப்பாளரான ராவுத்தரிடம் சென்று கொடுத்த அட்வான்ஸை திரும்ப வாங்கிவிட்டாராம்.
இதனால் கடுப்பான விஜய்காந்த் “இளையராஜாவிடம் சென்று ஏன் மற்றவர்களை வைத்துக் கொண்டு படம் பார்க்கிறீர்கள்” என்று சண்டைபோட்டு கோபித்துக் கொண்டு சென்றுவிட்டாராம். மேலும் படத்தை ரிலீஸ் செய்வது இல்லை என்ற முடிவையும் எடுத்துள்ளனர். இயக்குனர் செந்தில்நாதனோ மீண்டும் உதவி இயக்குனராகவே வேலை செய்ய சென்றுவிட்டாராம்.
இதற்கிடையில் திடீரென ஒருநாள் படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ளார். அதன் பின்னர் படம் விநியோகஸ்தர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டுள்ளது. அனைவருக்குமே படம் பிடிக்க, பின்னர் ரிலீஸ் செய்யப்பட்டு சூப்பர் ஹிட்டானது வரலாறு.
