கேரளாவில் கடந்த சில நாட்களாக அதிக கன மழை பெய்து வந்த நிலையில் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை என்ற கிராமத்தில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் அதிகமான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது.
இந்த மனதை உருக்கும் சம்பவத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் மற்றும் நடிகர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களால் முடிந்த உதவியும் கேரளா அரசின் பொது நிவாரண நிதியின் மூலம் அளித்துள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமா நடிகர்களான விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினர் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை எண்ணி நாங்கள் மிகுந்த வேதனை அடைகிறோம் என்று கூறியுள்ளனர்.
மேலும் இந்த துயரத்தில் இருந்து மீண்டு வருவதற்கு ஒரே வழி ஒருவருக்கு ஒருவர் உதவுவது மட்டுமே ஆகும். ஆகையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் விதமாக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூபாய் 20 லட்சம் வழங்கியிருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி தமிழக அரசாங்கம் மற்றும் தன்னார்வலர்கள் ,சமூக தொண்டர்கள், மீட்புக் குழுக்கள் ஆகியோர்களுக்கு மிகுந்த நன்றியும் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தை மீண்டும் நல்ல நிலைமைக்கு கொண்டுவர அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.