CINEMA
நடுராத்திரியில் ரயிலை பாதியிலே நிறுத்தச் சொன்ன விஜயகாந்த்.. ரயில் பைலட் என்ஜின் கேபினுக்குள் அதிரடியாக புகுந்த நெப்போலியன்…நடந்தது என்ன..?
நடிகர் நெப்போலியன் இப்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் அங்கு செட்டிலாகி விட்டார். ரஜினி, விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் வில்லனாக நடித்தவர். எட்டுப்பட்டி ராசா போன்ற சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். விஜயகாந்த் குறித்த நினைவுகளை சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அவர் பகிர்ந்துக்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, விஜயகாந்த் ஒரு மிகச்சிறந்த மனிதர். அவர் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்த போது, நானும் பொறுப்பில் இருந்தேன். பல நல்ல விஷயங்களை முன்னால் நின்று செய்து, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அவர் செயல்பட்டவர்.
கார்கில் போர் நடந்த சமயத்தில் கார்கில் நிதி திரட்டுவதாக முன்னணி நடிகர்கள், துணை நடிகர்கள், டெக்னிஷியன்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்ட கலைநிகழ்ச்சி மதுரையில் நடந்தது.விஜயகாந்த் தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு கிளம்ப, இரவு 11 மணியானது. ரயிலுக்கு நேரமாகி விட்டது. எல்லோருமே ரயிலில் ஏறிவிட்டோம். அதனால் யாருமே சாப்பிடவில்லை. இதனால் விஜயகாந்த் மிகவும் வருத்தப்பட்டார். நமக்காக, சம்பளமின்றி கலைநிகழ்ச்சி கலந்துக்கொள்ள, அனைவரும் வந்தனர்.
அவர்கள் பசியோடு இருக்க விடக்கூடாது. அடுத்த ஒரு மணி நேரத்தில் கொடை ரோடு வரும். ரயில் நின்றவுடன் நீங்கள் என்ஜின் இருக்கும் பைலட் அறைக்கு சென்று நிலமையை எடுத்துச் சொல்லுங்கள். அங்கு ரயிலை 10 நிமிடம் நிறுத்தச் சொல்லுங்கள், கொடைரோடு பகுதியில் நிறைய நைட் ஓட்டல்கள் இருக்கும். அதற்குள் நான் சென்று சாப்பிடுவதற்கு அனைவருக்கும் டிபன் வாங்கி வந்துவிடுகிறேன், என்றார்.
அதே போல் கொடை ரோட்டில் ரயில் நின்றவுடன் நான் அந்த இருட்டில் ஏழெட்டு கம்பார்ட்மென்ட் தாண்டியிருந்த என்ஜின் பைலட் அறைக்கு ஓடிச் சென்றேன். திடீரென்று கேபினுக்குள் புகுந்த என்னை பார்த்த அவர்கள் பயப்பட்டனர். பயப்படாதீங்க, என்று நிலைமையை விளக்கிச் சொல்லி எப்படியாவது 10 நிமிடங்கள் தாமதமாக புறப்படுங்கள். அதற்குள் எங்கள் தலைவர் விஜயகாந்த் அனைவருக்கும் உணவு வாங்கி வந்து விடுவார்.
போகும் வழியில் நீங்கள் வேகமாக சென்று சமாளித்து விடலாம் என்றேன். முதலில் மறுத்த அவர்கள், பின் சம்மதித்தனர். அந்த 10 நிமிடத்தில் இட்லி, தோசை, பரோட்டா, சட்னி, சாம்பார், குருமா என 200 பேருக்கும் உணவோடு ரயிலில் ஏறிவிட்டார் விஜயகாந்த். அப்புறம் 200 பேரும் சாப்பிட்ட பிறகுதான் ரிலாக்ஸ் ஆனார். அப்பேர்ப்பட்ட பண்பான, சிறந்த மனிதர் விஜயகாந்த் என கூறியிறுக்கிறார் நடிகர் நெப்போலியன்.