நெல்லை கேடிசி நகரில் இன்று (ஏப். 08) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மக்கள் பணத்தைத் தொட வேண்டிய அவசியம் தனக்குச் சிறிதும் கிடையாது என்று குறிப்பிட்ட அவர், இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியின் பணபலம் எடுபடாது என்று எச்சரித்தார். “உங்களுடைய பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது” என்று முழங்கிய விஜய், தற்போதைய ஆட்சியில் ஊழல் மலிந்து காணப்படுவதாகவும், மக்களின் வலிகளைத் துடைக்கவே தான் அரசியலுக்கு வந்திருப்பதாகவும் உணர்ச்சிப்பொங்கத் தெரிவித்தார்.
தனது உரையின் இறுதியில் தேர்தல் களம் குறித்துப் பேசிய அவர், எத்தனை முனைப் போட்டிகள் இருந்தாலும் இந்தத் தேர்தல் என்பது தவெக-விற்கும் ஆளுங்கட்சிக்கும் இடையிலான இருமுனைப் போட்டிதான் என்பதைத் தெளிவுபடுத்தினார். பல தடைகளையும் வலிகளையும் தாண்டி உங்களுக்காக மேடையில் நிற்கிறேன் என்று கூறிய விஜய், தொண்டர்களை நோக்கி “விசில் அடிக்க ரெடியா?” என்று உற்சாகமாகக் கேட்டு தனது உரையை நிறைவு செய்தார். இது அங்கிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
