தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (ECI) அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கத் திட்டமிட்டுள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள், போதிய பேருந்து வசதிகள் இன்றி கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் தவித்து வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போக்குவரத்து முடக்கத்தால் மக்களின் ஜனநாயக உரிமை பாதிக்கப்படுவதாகக் கவலை தெரிவித்துள்ள அவர், உடனடியாகக் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் எதிர்கொள்ளும் இந்த இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு, வாக்குப்பதிவு நேரத்தை கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என்றும் விஜய் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். கிளாம்பாக்கம் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து வசதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், விஜய்யின் இந்த அதிரடித் தலையீடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்க தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்பதே அவரது பிரதான கோரிக்கையாக உள்ளது.
