தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை தற்போது முற்றுப்புள்ளிக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. காங்கிரஸின் வருகைக்காக தவெக தலைமை காத்திருந்த நிலையில், அக்கட்சி முடிவெடுப்பதில் காட்டி வரும் தாமதம் மற்றும் தயக்கத்தால் அதிருப்தியடைந்த நடிகர் விஜய், வரும் தேர்தலில் யாருடனும் கூட்டணி இன்றி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி இதுவரை தனது நிலைப்பாட்டை உறுதி செய்யாமல் இழுபறி நிலையில் நீடிப்பதால், இனி அக்கட்சி முன்வந்தாலும் கூட்டணி தேவையில்லை என்ற மனநிலைக்கு விஜய் வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த திடீர் மாற்றத்தால், காங்கிரஸ் கட்சி மீண்டும் திமுக கூட்டணியிலேயே தொடர வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், திமுகவிடம் குறைந்த இடங்களைப் பெற்றுக்கொண்டு இரண்டாம் நிலையில் நீடிப்பதை அக்கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் பலரும் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
தனி வழியில் களம் காணும் விஜய்யின் இந்தத் துணிச்சலான முடிவு, தமிழக தேர்தல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தும் விஜய், பிற கட்சிகளைச் சார்ந்து நிற்காமல் நேரடியாக மக்களின் ஆதரவைப் பெறத் திட்டமிட்டுள்ளார். இந்த ‘தனி வழி’ வியூகம் மற்ற அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், வரும் தேர்தலில் இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
