அதிமுகவை Washing Machine-ல் வெளுத்துட்டீங்களா?… “இது வெறும் ஆரம்பம்தான்”… எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ‘தக் லைஃப்’ பதிலடி….!

By Nanthini on தை 30, 2026

Spread the love

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்வதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். குறிப்பாக, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு காட்டி வரும் முனைப்பு, மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்துள்ளதாக அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை முறியடித்து, மக்கள் நலத்திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்தி வருவதை அவர் தனது உரையில் கோடிட்டுக் காட்டினார்.

மகளிர் நலனுக்காகக் கொண்டு வரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்துப் பேசிய முதல்வர், இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்று கூறி வந்த எதிர்க்கட்சிகளுக்குத் தகுந்த பதிலடி கொடுத்தார். தற்போது சுமார் ஒரு கோடியே 31 லட்சம் பெண்கள் மாதந்தோறும் 1,000 ரூபாய் பெற்று வருவதாகவும், இதற்காக இதுவரை 33,464 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். திமுக சொன்னதைச் செய்யும் என்ற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு இந்தத் திட்டமே சாட்சி என்று அவர் உரையாற்றினார்.

   

அதேபோல், பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட இலவசப் பேருந்து பயணம் (விடியல் பயணம்) திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதுவரை 835 கோடிக்கும் அதிகமான பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் விளிம்பு நிலை மக்கள் பெரும் பயன் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பார்த்து இன்று பல்வேறு மாநிலங்களும் இதைப் பின்பற்றத் தொடங்கியிருப்பதே ‘திராவிட மாடல்’ அரசு நாட்டிற்கே வழிகாட்டி என்பதற்குச் சிறந்த அடையாளம் என்று அவர் குறிப்பிட்டார்.

   

எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ‘வாரிசு அரசியல்’ என்ற குற்றச்சாட்டை “இற்றுப்போன குற்றச்சாட்டு” என்று ஸ்டாலின் கடுமையாகச் சாடினார். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் மக்கள் முன்னால் நின்று அவர்கள் நம்பிக்கையைப் பெற்றால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று தெளிவுபடுத்தினார். தங்களை நேரடியாகக் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்கள், பழைய ஸ்கிரிப்ட்களை வைத்துக்கொண்டு வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பொய்களைப் பரப்புவதாக அவர் குற்றம் சாட்டினார்.

 

ஊழல் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த முதலமைச்சர், அதிமுக ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் வரை தண்டிக்கப்பட்ட கட்சி என்பதைச் சுட்டிக்காட்டினார். ஊழல் செய்தவர்களைத் தன்னுள் இணைத்துக் கொண்டு பாஜக தனது ‘வாஷிங் மெஷின்’ மூலம் அவர்களை வெளுத்துக் கொண்டிருப்பதாக எள்ளி நகையாடினார். திராவிட மாடல் ஆட்சியின் வளர்ச்சியைச் சகித்துக் கொள்ள முடியாதவர்களே இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சுமத்தி வருவதாக அவர் தனது உரையை நிறைவு செய்தார்.