தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பனையூர் அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று 232 வேட்பாளர்களுடன் ஒரு முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளார். இந்தக் கூட்டம் இன்று மதியம் 1 மணிக்குத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு வரும் அனைத்து வேட்பாளர்களும் கட்டாயமாக ’17C’ படிவத்தின் நகலைக் கொண்டு வர வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளார். அந்தப் படிவத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் பிற முக்கியத் தகவல்கள் இடம்பெற்றிருக்கும். வாக்குப்பதிவு விவரங்களைச் சரியாகக் கணக்கிட இந்தப் படிவம் அவசியமாகக் கருதப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலில் தவெக வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கள நிலவரங்களைக் கேட்டறிந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
