நடிகர் ரஜினிகாந்த் பல நடிகைகளுடன் காதல் படங்களில் நடித்திருக்கிறார். ஸ்ரீதேவி, அம்பிகா, ராதா முதல் நயன்தாரா, அனுஷ்கா வரை ஹீரோயின்களாக அவருடன் நடித்திருக்கின்றனர். அவருடன் நடித்த நடிகைகள் யாருமே, அவரை பற்றி எப்போதுமே குறையோ, தவறான புகாரோ சொன்னது இல்லை என்பதுதான் உண்மை. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ரம்பா, நான் அருணாசலம் படத்தில் நடித்த போது மதியம் வரை இந்த படப்பிடிப்பிலும், அதற்கு பின், சல்மான்கான் நடித்த பந்தனம் படத்துக்கான படப்பிடிப்பிலும் கலந்துக்கொண்டேன்.
அருகில் இருந்த ஷெட்டில்தான் அந்த ஷூட்டிங் நடந்தது. அப்போது ரஜினியை பார்க்க வந்த சல்மான்கானை நான் கட்டிப்பிடித்து வரவேற்றேன். அதுதான் பாலிவுட்டில் பழக்கம். அதற்காக கோபப்படுவது போல் அடுத்தநாள் ரஜினி கலாட்டா செய்தார். அப்புறம் ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் லைட்ஸ் ஆப் ஆன போது யாரோ என்னை பின்னால் தட்டினார்கள். இருட்டில் தெரியவில்லை. பிறகு பலரிடமும் விசாரித்த போது என்னை பயமுறுத்த, ரஜினிதான் அப்படி தட்டினார் என்று தெரிந்துக்கொண்டேன் என கூறியிருந்தார்.
இதையடுத்து, ரம்பாவிடம் தவறாக நடந்துக்கொண்ட ரஜினி என விஜய் ரசிகர்கள் புயலை கிளப்பிவிட, அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் ஒரு நேர்காணலில் கூறுகையில், இது பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். ஒரு ஜாலியான விஷயமாக தான் அதை ரம்பா நேர்காணலில் சொல்லி இருக்கிறாரே தவிர, புகாராக சொல்லவில்லை. இதை ரஜினி மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் இப்படி பிரச்னையை பெரிதுபடுத்தி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஆரம்பித்ததில் இருந்து அஜீத்தை விட்டுவிட்டு, இப்போது ரஜினியை விஜய் ரசிகர்கள் பிடித்துக்கொண்டனர் என்று கூறியிருக்கிறார் அந்தணன்.