CINEMA
சென்னையில் இருந்தும் கலைஞர் 100 விழாவுக்கு ஆப்சன்ட் ஆன விஜய், அஜீத்.. வராததற்கு அந்த விஷயம் தான் காரணமா..?
கருணாநிதி நுாற்றாண்டு விழாவை, திமுகவினர் பொதுக்கூட்டங்கள் நடத்தியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். கருணாநிதி தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகள் பயணித்தவர். பல திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியவர், முதலமைச்சராக பல திட்டங்களை தமிழ் சினிமாத்துறைக்கு அறிவித்தவர் என்ற வகையில், அவருக்கு நன்றி பாராட்டும் விதமாக, கலைஞர் 100 விழாவை, சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், நயன்தாரா, ஜெயம் ரவி, யோகிபாபு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
ஆனால் நடிகர்கள் அஜீத்குமார், விஜய் இந்த விழாவில் கலந்துக் கொள்ளவில்லை. ஆனால் இவர்கள் வெளிநாடுகளுக்கு எதுவும் படப்பிடிப்புக்கும் செல்லவில்லை. இருவருமே விழா நடந்த கடந்த 6ம் தேதி, சென்னையில்தான் இருந்தனர். துபாயில் இருந்த அஜீத், ஐந்து நாட்களுக்கு முன்பே குடும்பத்துடன் சென்னை வந்துவிட்டார். நடிகர் விஜயும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில், சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில்தான் கலந்துக்கொண்டு இருக்கிறார். இப்படி இருவருமே வராமல் போனதால், அந்த விழாவே களை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு காரணம், 50 ஆயிரம் அமரும் வாய்ப்புள்ள அந்த மைதானத்தில் 20 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வந்தது வெறும் 700 பேர்தான். ரஜினி மேடையில் பேசும் முன்னால் இருந்த காலி சேர்களை பார்த்துதான் பேசி இருக்கிறார். விஜய், அஜீத் விழாவுக்கு வந்திருந்தால் கண்டிப்பாக பல ஆயிரம் பேர் நிகழ்ச்சிக்கு வந்திருப்பார்கள். அவர்களை அங்கு வரச் செய்வதற்கு விழாக்குழுவினர் போதிய அக்கறை, ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
குறிப்பாக கருணாநிதி 100 விழா அழைப்பிதழ் ரஜினி, கமல் பெயர்களை குறிப்பிட்ட நிலையில், தமிழ் சினிமாவில் அடுத்த நிலையில் இருக்கும் டாப் ஸ்டார்களான விஜய், அஜீத்குமார் பெயர்களை அழைப்பிதழில் குறிப்பிட்டு இருந்தால் நிச்சயமாக அவர்கள் வந்திருப்பார்கள். விழாக்குழுவினர் போதிய ஆர்வம் காட்டாததால் இந்த ஏமாற்றம் நிகழ்ந்து விட்டது. அதனால்தான் அவர்கள் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.