மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கஞ்சுர்மர்க் ரயில் நிலையத்திற்கு அருகே தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், இந்தியாவின் அதிவேக ரயிலான ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ தேங்கி நின்ற மழைநீரைக் கிழித்துக் கொண்டு கம்பீரமாக முன்னேறிச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரயில் தண்டவாளத்தில் தேங்கியிருந்த தண்ணீரை இருபுறமும் சிதறடித்துக் கொண்டு சீறிப் பாய்ந்த இந்த காட்சி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கொட்டித் தீர்க்கும் பருவமழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்கள் பல இடங்களில் தண்ணீரில் மூழ்கியிருந்தாலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே அதிகாரிகள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பல வழித்தடங்களில் ரயில்கள் சற்றே மெதுவாக இயக்கப்பட்டாலும், போக்குவரத்து முழுமையாக முடங்கிவிடாமல் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
https://www.instagram.com/reel/DaYgHWASBqQ/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வைரல் வீடியோ சமூக வலைத்தளங்களில் கலவையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் பலர் வந்தே பாரத் ரயிலின் நவீன தொழில்நுட்பத்தையும், அதன் இன்ஜினியரிங் திறனையும் பாராட்டி வரும் வேளையில், மற்றொரு தரப்பினர் மும்பையின் வடிகால் அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்துக் கேள்வி எழுப்பி, வெள்ள நிலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த நீர் தேங்கிய தண்டவாளத்தில் பயணித்ததால் வந்தே பாரத் ரயிலுக்கு எந்தவித தொழில்நுட்பக் கோளாறோ அல்லது பாதிப்போ ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
