தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தனது கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். மறுபக்கம் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் தங்கள் ஆட்சியை தமிழகத்தில் அமைக்க காய் நகர்த்தி வருகிறார்.
இவர்களுக்கு நடுவே நடிகர் விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் கனவு காண்பது போல் 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் அல்ல இரண்டு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். திமுக அரசு மக்கள் நலனில் கவனம் செலுத்தாமல் மோடியை எதிர்த்து மட்டுமே பேசிக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். திமுகவை வீட்டுக்கு அனுப்பவே அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
