LIFESTYLE
உலகின் விலை மதிக்க முடியாத மரகத நடராஜர் சிலை.. வியக்க வைக்கும் உண்மைகள்
பழங்காலப் பொருட்களுக்கு எப்பவுமே மவுசு அதிகம். அதிலும் குறிப்பாக நம் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் சிலைகளுக்கு பின்னால் பெரிய வரலாறே உள்ளது. பழனி முருகன் நவபாஷாண சிலை, உத்திரகோசமங்கை மரகத நடராஜர் சிலை உள்ளிட்ட விலை மதிக்க முடியாத கடவுளின் சிலைகள் உள்ளன. தொல்பொருள் துறைக்கு சவால் விடுக்கும் இந்த சிலைகளின் உருவாக்கம் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த சிலைகள் அதையும் தாண்டி நம்பிக்கைக்குரியதாகவும், விலை மதிப்பற்றதாகவும் விளங்குகிறது.
இதில் உத்திரகோசமங்கை பச்சை மரகத நடராஜர் சிலையின் மர்மங்களைப் பற்றிக் காணலாம். தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் நகருக்கு அருகில் உள்ள உத்திரகோசமங்கை என்னும் ஊரில் சைவக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மங்களநாத சுவாமி கோயில், தமிழ் சைவத் துறவிகளான மாணிக்கவாசகர் (கி.பி. 9ஆம் நூற்றாண்டு) மற்றும் அருணகிரிநாதர் (15ஆம் நூற்றாண்டு) ஆகியோரால் போற்றப்பட்ட புகழ்பெற்ற யாத்திரைத் தலமாகும்.
மங்களநாதர், மங்களாம்பிகை மற்றும் நடராஜர் ஆகிய தெய்வங்கள் குடிகொண்டிருக்கும் இந்தக் கோவிலின் சிறப்பே நடராஜரின் சிலைதான். 6 அடி (1.8 மீ) அளவுள்ள இந்த உயரமான சிலையின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது ஒரு மரகத கனிமத்தால் (மரகத நடராஜர் சிலை) உருவாக்கப்பட்டுள்ளதுதான். இந்தச் சிலை இக்கோவிலுக்கு எப்படி வந்தது தெரியுமா?
ராமேஸ்வரம் போகும் வழியில் மண்டபம் என்று பகுதி உண்டு. அந்தப் பகுதியில் “மரைக்காயர்” என்ற மீனவர், வறுமையின் பிடியில் நம்பிக்கையுடன் மங்களேஸ்வரரை தினமும் வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் கடலில் மீன் பிடிக்கும்போது சூறாவளிக் காற்று அடித்து ஒரு பாசிபடிந்த பாறையின் மேல் மோதி நின்று விட்டது.
படகில் கொண்டு வந்த பாசிபடிந்த கற்களை என்ன என்று தெரியாமல் வீட்டுப் படிக்கல்லாக போட்டு வைத்தார் மரைக்காயர். ஒருநாள் அந்த கல் மீது இருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி சூரிய வெளிச்சத்தில் பளபள வென்று மின்னியது. உடனே அவர் பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்று நடந்த அனைத்தையும் விவரித்து, தன் வீட்டில் ஒரு பெரிய பச்சைக் கல் உள்ளது என்று சொன்னார். அரண்மனை ஆட்கள் பச்சைப் பாறையை வீட்டில் இருந்து எடுத்து வந்து அரசரிடம் காட்டினார்கள். கற்களைப் பற்றி விவரம் உள்ள ஒருவர் பச்சைப் பாறையை சோதித்து பார்த்தார்.
ஓயாத உழைப்பால் உருவான OYO.. ஊர் சுற்றப் போனவர் மூளையில் உதித்த மில்லியன் டலர் வருமான ஐடியா
சோதித்தவர் ஆச்சரியத்துடன் “இது விலை மதிக்கமுடியாத அபூர்வ மரகதக்கல், உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது” என்று சொன்னார். உடனே மன்னரும் மரைக்காயருக்கு பச்சைப் பாறைக்கு உரிய பொற்காசுகளை அளித்து வழி அனுப்பினார். மேலும் அவர் அருமையான கல்லில் ஒரு நடராஜர் சிலை செதுக்க வேண்டும் என்பது அரசரின் ஆசைப்பட. இதனால் இலங்கை சிற்பியை அணுகினார். அவர் இயலாது என்று கைவிரிக்க பின் சித்தர் சண்முக வடிவேலர் நடராஜர் சிலையை வடிவமைத்தார்.
அந்த பெரிய மரகத பாறையில் அஞ்சரை அடி உயர நடராஜரை ஒன்னரை அடி உயர பீடத்துடன் “ராஜ கோலத்தில்” மிகவும் நுணுக்கமாக மரகத நடராஜர் திருக்கரங்களில் உள்ள நரம்பு தெரியும் அளவிற்கு (பால் அபிஷேகத்தின் போது காணலாம்) வடித்தார் சித்தர் சண்முக வடிவேலர்.
அடர் பச்சை நிறத்தில் உள்ள இந்த விலைமதிப்பற்ற மரகத சிலையை பாதுகாக்க கோவில் அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்துகின்றனர். கனமான கதவுகள், கிரில் கேட்கள் மற்றும் பர்க்லர் அலாரம் கொண்ட பாதுகாப்பான பெட்டகத்தில் இது பாதுகாக்கப்படுகிறது.
திருவாதிரைத் திருவிழாவைத் தவிர்த்து ஆண்டு முழுவதும் இந்தச் சிலைக்கு சந்தனக் கலவையால் அபிஷேகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.