முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் இருந்து போலீஸ் வேனில் தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரைப் பின்தொடர்ந்து திமுகவினர் சொந்த வாகனங்களில் வந்ததோடு, பல இடங்களில் விஜய்யின் உருவபொம்மையை எரித்துப் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். பயணம் வழியில் திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியை வாகனம் கடக்கும்போது, திமுக தொண்டர்கள் சிலர் காவல் வாகனத்தை வழிமறிக்க முயன்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு உதயநிதி கொண்டு செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டதால், அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். ஆனால், காவல்துறையினர் கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றி, அவரைச் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையைத் தொடங்கினர். விஷயம் அறிந்த திமுகவினர் உடனடியாக செங்கிப்பட்டி காவல் நிலையம் முன்பாகக் குவியத் தொடங்கினர்.
தற்போது உதயநிதியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர் விடுவிக்கப்படும் வரை இடத்தை விட்டு நகர மாட்டோம் எனத் தெரிவித்து, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தவெக அரசுக்கும் காவல் துறைக்கும் எதிராகத் தொடர் முழக்கமிட்டு வருகின்றனர். இதனால் செங்கிப்பட்டி காவல் நிலையப் பகுதியில் உச்சகட்டப் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
