சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே 23 அன்று திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மத்தியில் பாஜகவின் தொடர் வெற்றிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் தான் காரணம் என இதுவரை தான் நினைத்துக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார். ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் அதற்கு உண்மையான காரணம் காங்கிரஸ் கட்சி தான் என்பது தெளிவாகத் தெரிந்துள்ளதாகக் கூறி அவர் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை எந்தக் காலத்திலும் நம்பக்கூடாது என்றும், எப்போதும் அவர்களைக் கூட்டணி என்ற பெயரில் கூட கிட்ட சேர்க்கக்கூடாது என்றும் கட்சி நிர்வாகிகளிடையே மிக ஆக்ரோஷமாகப் பேசினார். நடந்து முடிந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த முக்கிய கூட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் அங்கிருந்த திமுக இளைஞரணி நிர்வாகிகளும் காங்கிரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பியதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
