மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக, சக ஊழியரைக் கொலை செய்ய முயன்ற இரு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ‘பிளிங்கிட்’ நிறுவனத்தில் பணிபுரியும் அமீன் முஸ்தபா பதான் (34) என்பவர், தனது பணியைத் துரிதமாகவும் சரியான நேரத்திலும் முடித்து நிறுவனத்தில் நல்ல பெயர் பெற்றிருந்தார். இதனால் அவர் மீது பொறாமை கொண்ட சக ஊழியர்களான கேத்தன் உர்குடே (20) மற்றும் சிரவன் பராய் (20) ஆகிய இருவரும் அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அமீன் தனது டெலிவரி வேலையை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அந்த இருவரும் அவரது மோட்டார் சைக்கிளை வழியறித்துக் கத்தியால் கொடூரமாகக் குத்திவிட்டுத் தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கணேஷ்பேத் காவல்துறையினர், இருவரையும் கைது செய்து இத்தாக்குதலுக்கு வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
