விசாகப்பட்டினம் பெடகாந்தியாடா மண்டலத்திற்கு உட்பட்ட பட்டா கங்காவரம் கடற்கரையில், நண்பர்கள் தினத்தன்று ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று காலை 8 மணி அளவில், புகைப்படங்கள் எடுப்பதற்காக நான்கு இளம்பெண்கள் மற்றும் மூன்று இளைஞர்கள் அடங்கிய குழுவினர் இக்கடற்கரைக்கு வந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஜலாரிப்பேட்டையைச் சேர்ந்த 18 வயதான நீத்து என்ற பெண் கடலலைகளில் சிக்கி நீரில் மூழ்கினார். அவரைக் காப்பாற்ற உடனடியாக முயன்ற பெண்டுர்த்தியைச் சேர்ந்த தாமோதர் என்ற இளைஞரும் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த நீத்து இரண்டாம் ஆண்டு இன்டர்மீடியட் படித்து வந்த மாணவி ஆவர். தாமோதருக்கு சில நாட்களுக்கு முன்புதான் கனகமஹாலக்ஷ்மி என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து நியூ போர்ட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
