நல்ல நேரம் நெருங்குது.. ஆனா ஆதரவு கடிதம் வரல.. கம்யூனிஸ்ட்கள் கையில் விஜய்யின் முதல்வர் கனவு..? இழுபறியில் தமிழக முதல்வர் நாற்காலி..!!

By Soundarya on வைகாசி 7, 2026

Spread the love

தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுப் பட்டியலை சமர்ப்பித்தால் மட்டுமே தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய், 35 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும், தனிப்பெரும் கட்சி என்ற முறையிலும் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். ஆனால், அரசியலமைப்புச் சட்டப்படி பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான எண்ணிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்பதில் ஆளுநர் உறுதியாக இருப்பதால், நாளை நடைபெறவிருந்த பதவி ஏற்பு விழாவில் சிக்கல் நீடிக்கிறது.

தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் சட்டப்படி ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் கட்சியின் பலம் 107 ஆகக் குறையும். மேலும், சபாநாயகர் நியமனத்திற்குப் பிறகு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 106 ஆகக் குறைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தவெக ஆட்சி அமைக்க இன்னும் 12 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கட்டாயம் தேவைப்படுகிறது. இந்த எண்ணிக்கை இடைவெளியை நிரப்புவதே தற்போது விஜய்க்கு முன்னால் உள்ள மிகப்பெரிய சவாலாகும்.

   

தவெக-வின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை வழங்க முன்வந்துள்ளது. இருப்பினும், விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இன்னும் தங்களது நிலப்பாட்டை அறிவிக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் நாளை தான் இது குறித்து முடிவெடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளன. இவர்களின் ஆதரவு கடிதம் இல்லாமல் 118 என்ற மேஜிக் எண்ணை எட்ட முடியாது என்பதால், விஜய்யின் அடுத்தகட்ட நகர்வு கம்யூனிஸ்ட் கட்சிகளை நோக்கியே உள்ளது.

   

இன்று ஒரு நல்ல நாள் என்பதால், அன்றே முதலமைச்சராகப் பதவி ஏற்க விஜய் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால், ஆளுநர் கோரியுள்ள ஆதரவுப் பட்டியலைத் திரட்டுவதில் தாமதம் ஏற்படுவதால், திட்டமிட்டபடி பதவி ஏற்பு விழா நடப்பது சந்தேகமாகியுள்ளது. ஒருவேளை தவெக-வால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால், அடுத்த பெரிய கட்சியான திமுக-வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கக்கூடும். ஆனால், திமுக இது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருகிறது.

 

 “தேர்தலுக்கு முந்தைய அல்லது பிந்தைய கூட்டணி, அல்லது வெளியில் இருந்து ஆதரவு என எந்த முறையில் வேண்டுமானாலும் பெரும்பான்மையை நிரூபிக்கலாம், ஆனால் அரசியலமைப்புக்கு உட்பட்டே முடிவு எடுப்பேன்” என ஆளுநர் கூறியுள்ளார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடும் பட்சத்தில், தமிழகத்தில் ஒரு ‘குறைந்தபட்ச அரசு’ அமையவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.